வானமழை நீயெனக்கு: பாவலர் கருமலைத்தமிழாழன்


அறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட
அறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம்
நறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த
நாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல்
குறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம்
குடும்பத்து விளக்கிலுள்ள முதியோர் போல
முறுவலுடன் தாயாகப் பெற்றெ டுத்த
மூவருடன் நான்காகப் பேணு கின்றாய் !
எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்றோர் தம்மை
ஏந்திநின்ற சுற்றத்தை ஊரை யெல்லாம்
பொங்கிவந்த அழுகையுடன் புதைத்து விட்டுப்
பொறுப்புடனே வந்தபுது உறவை நெஞ்சுள்
தங்கவைத்துப் பிறந்தவீட்டுப் பண்பாட் டோடு
தழைக்கவைக்கப் புகுந்தவீட்டில் உறுதி யேற்று
மங்கலத்தை என்வாழ்வில் ஏற்றி வைத்து
மகளென்றே என்பெற்றோர் புகழ நின்றாய் !
மூத்தவன்நான் என்பின்னே இரண்டு தங்கை
மூன்றுதம்பி அனைவருக்கும் தாயாய் ஆனாள்
பூத்தரோசா மலரோடு முளைக்கும் முள்ளாய்ப்
பூசலினை முளையிலேயே கிள்ளிப் போட்டுப்
பாத்திரத்தில் சோறுபொங்கி வழிந்தி டாமல்
பக்குவமாய்க் கூட்டாகக் குடும்பம் காத்துச்
சூத்திரத்தில் தொல்காப்பி யர்தாம் தந்த
சுடரும்மூ விலக்கணம்போல் சுடர வைத்தாய் !
அருங்கவிதை நானெழுதக் கவலை வந்து
அண்டாமல் எனக்குவரும் வருவா யோடு
வருவாயைப் பெருக்குதற்கே தையல் வேலை
வண்ணமிகு பூவேலை கற்றுத் தந்து
பொறுப்புடனே மூவரினை வளர்த்தா ளாக்கிப்
பொலிவுடனே பலநூல்கள் எழுதிப் பேரும்
பெருமைபெறத் துணைநிற்கும் மனைவி நீதான்
பேரமுத வானமழை நீயெ னக்கு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...